Friday, January 30, 2015

குசும்பன் பொன்னாருக்கு ஒரு மடல்




ராசா பொன்னாரு நீ தெற்கத்தி மண்ணில் காவி வெறியேற்றி மக்களை உசுப்பிவிட்டு சாதித்து விடலாம் என்று தானே எண்ணுகிறாய் ..... ஆனால் தெற்கத்தி மண்ணில் காவி வெறியை விட ஆழமாய் வேர் கொண்டது சாதி வெறி என்பது காவி வெறியேறிய போதையில் நீ அறியாமல் இருந்து இருக்கலாம் ..... ஆனால் பழைய பகைகளை வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் நாளுக்காக காத்திருக்கும் பல கும்பல்களை நான் அறிவேன் .... வன்முறை வெடிக்கும்போது அது சாதீய வன்முறைகளாக தான் மாறும் . நீ எந்த காவி வெறியை ஏற்றி கொண்டலைகிறாயோ அந்த வெறிக்கு கிருத்துவ சமூகத்தை சேர்ந்த உனது உறவுகளும் பாதிக்கப்படும் என்பதை நீ அறியாயா ? நம் முப்பாட்டிகளின் முலையறுக்கப்பட்ட நாளில் இருந்து நீ ஒளி ஆண்டுகள் தொலைவில் இல்லை . அதன் வடுக்கள் இன்றும் கனன்று கொண்டு தான் இருக்கின்றன . அதை ஏற்படுத்திய கொள்ளிக்கட்டைகளும் புகைந்து கொண்டு தான் இருக்கின்றன . ஆனால் அது நம் முப்பாட்டிகளின் மீது வடுக்களை ஏற்படுத்திய கொள்ளிக்கட்டை என்பதை மறந்து , காவி எரிபொருள் கிட்டங்கியின் அருகில் நின்று கொண்டு.. உன் தலையில் அதை வைத்து சொரிந்து கொண்டிருக்கிறாய் . எல்லாம் கட்டு மீறி வெடித்து சிதறுவதற்குள் விழித்துக் கொள் ..... இல்லையென்றால் ..... உனது செயல்களாலேயே உன் கதை முடியும் நாள் வரும் ... அப்போது உனக்காக அழுவதற்கு உனது உறவுகள் இருக்க மாட்டார்கள் ....
அப்படியொரு மோசமான நாளை நீ சந்தித்து விடக் கூடாது என்பதே என்னுடைய ஆவல்

இப்படிக்கு
உன் மீதும் பரிதாபம் காட்டும்
உன் உறவு
அந்தோணி


பின்குறிப்பு: பொன்னாரன் இப்போது எந்த பொந்துக்குள் இருப்பாரோ என்று எமக்கு தெரியாது . யாராவது அந்த தேரையை காண நேர்ந்தால் அது அடைக்கலம் என்று அடைந்து கிடப்பது பாம்பின் பொந்துகள் என்று அதற்கு அறிவுறுத்தி எனது மடலையும் சேர்த்து விடுங்கள்.

https://www.facebook.com/anthony.fernando.796/posts/678180592266239

Thursday, January 29, 2015

சித்தார்த்தனும் போதித்த மரமும்



மூடநம்பிக்கையில்
மூழ்கி கிடந்த
மூட சமூகத்தின்
அடிமைச் சங்கிலியை
அடித்து நொறுக்க
சித்தார்த்தன்
போதி மரத்தின் கீழமர்ந்து
துன்பத்திற்கான காரணிகளை
பகுத்து அறிந்து
புத்தன் ஆனான்
பொதி சுமப்பதற்காகவே
நேர்ந்து விடப்பட்ட
இருகால் மாக்கள்
புத்தன் ஞானம் பெற்ற
போதிமரத்தின் அடிமரத்தை
இரும்பு கோடலிகளால்
பிளந்து கொண்டிருக்கின்றன
பிறிதோர் புத்தன்
பிறந்திடகூடாதல்லவா...


வயதிற்கு வந்த காதல்



அவள் ஓரவிழி
கண்ணசைவில்
என் கைவிரல்கள்
மெல்ல நீண்டு
என் மேல் விழுந்த
அவள் முடி தீண்ட
மங்கையவள்
புன்னகையில்
என் மெய்மறந்து
நான் இருக்க
நீல பௌர்ணமி
நிலவொளியில்
என்னவளின்
மெல்லிதயம்
வெட்கம் மென்று
பூப்படைய
நாணத்தால்
நனைந்த
அந்நாழிகையில்
எனது காதலும்
வயதுக்கு வந்தது

எலும்புக் கூடுகளின் தேடல்


ரெண்டு நாள் பெய்த மழையில் ஊரே வெள்ளக்காடாகி விட்டதாம். இன்னும் கொஞ்ச நாளில் தனித் தீவாகி விடுமாம். எல்லா இடத்திலும் இருந்து கோபக் குரல்கள், வெடிக்கும் இடி சத்தங்களையும் தாண்டி எழும்புகிறது. ஒருவர் முந்தைய அரசை சாடுகிறார். இன்னொருவர் இன்றைய அரசை சாடுகிறார். ஆனால் இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் இச்சமூகத்தின் பேராசை தான் என்று தெரு வெளிகளில் நின்று உரக்க கத்துகிறேன் ..... ஆனால் குளங்களும் ஏரிகளும் நிரவப்பட்டு எழுப்பட்ட concrete கல்லறைகளை சொந்தமாக்குவதற்கு காதுகளை செவிடாக்கி கொண்டு விரைகின்றனர் இரு கால் மாக்கள். என்னவென்று கேட்டால் அங்கே தான் நீரூற்றுகள் அதிகமாம் . புல் வளர்வதற்கு ஏற்ற இடமாம். அவங்க சொல்லுறதும் சரி தான் . புதைக்கப்படப் போகும் இடத்தில் புல் வேகமாக வளர்ந்தால் , அங்கே தலை சாய்க்கப் போகும் எலும்பு கூடுகளுக்கு பஞ்சணை வாங்கும் காசு மிச்சமாகுமே .

தட்டான் பூச்சி

                                                                                                           படம் : G Cruz Antony Hubertt


ஒ எனதருமை
தட்டான் பூச்சியே ,
உன்னோடு ஓடியாடிய
பசுமையான நினைவுகளை
புதைத்து வைத்திருக்கும்
கடந்து போன
காலங்களின் பிம்பங்கள்
உன் இறக்கைகளில்
நீ சுமக்கும்
கண்ணாடி திரையில்
நிறம் மாறா
ஆவணப் படமாய்
மறுபடியும்

மணியாச்சியும் ஒரு மணியாட்டியும்

ஐயா மணியாச்சி வந்து விட்டதா என்று எதிர் இருக்கையில் இருந்த பெரியவர் ஒருத்தரிடம் கேட்க அவர் வாஞ்சி மணியாச்சி வந்து விட்டது என்று சொல்லி விட்டு , வாஞ்சி மணியாச்சியில் உள்ள வாஞ்சி என்னவென்று தெரியுமா ? என்று கண்டிப்பான ஆசிரியர் அப்பாவியான மாணவனிடம் பிரம்பை காட்டி கேட்கும் தொனியில் அப்பெரியவர் கேட்டபோது எனக்கு கொஞ்சம் திகைப்பு .... அடடா நான் மணியாச்சி வந்து விட்டதா என்று தானே கேட்டேன் இவர் வாஞ்சி என்றால் என்னவென்று தெரியுமா ? என்று பூட்டு போடுகிறாரே என்று எண்ணிய படி என்ன பதிலை இவருக்கு சொல்லலாம் என்று கொஞ்ச நேரம் மனதிற்குள் முழித்து கொண்டு இருந்தேன் . இதற்கு இடைப்பட்ட தருணத்தில் அவர் என்னை ஏளனமாக பார்ப்பது போல ஒரு பார்வையை தூக்கி எறிய.... ம்ம்ம்ம் அவராகவே வந்து வண்டியின் குறுக்கே வந்து படுத்து விட்டார் நாம ஏத்தாம விட்டா தான் தப்பு என்று எண்ணியபடியே , அய்யா இந்த பெயருக்கு பின்னால் வாஞ்சி நாதன் என்ற பார்ப்பன இளைஞர் இருக்கிறார் . அவர் ஆசு என்ற வெள்ளைக்கார துறையை சுட்டுக் கொன்று விட்டு தொடர்வண்டி பெட்டியின் கழிவறையில் போய் உட்கார்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது நினைவாக மணியாச்சி என்ற இந்த ஊருக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள் என்றேன்


இப்போது நான் அது சரி வாஞ்சிநாதன் ஆசுதுரையை எதற்கு சுட்டார் என்ற காரணம் தெரியுமா ? என்று அவரிடம் வினவினேன். அவர் அதற்கு " அதுவா, அது ஆசு துரை நம் நாட்டு மக்களுக்கு ஏராளமான கொடுமைகள் செய்தான். அதனால் ஆசுதுரையை வாஞ்சிநாதன் சுட்டு கொன்றான். இது தான் வரலாறு என்றார். பதிலுக்கு நான் " யார் அந்த நாட்டு மக்கள் ?, அந்த வரலாறை எழுதியது யார் ? என்ற கேள்விகளை முன் வைத்தேன் . தம்பி நீங்க இளவயதுகாரங்க இல்லையா அதனால் உங்களை மாதிரி இளைஞர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை, இப்போதெல்லாம் இளைஞர்களிடம் நாட்டுப்பட்டு பெரிதாக இருப்பதில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டார். அதற்கு நான் ஐயா நீங்க சொல்வது பார்ப்பனர்கள் தங்களுக்காக புனைந்து கொண்ட வரலாறு . நான் கேட்பது மண் சொல்லும் வரலாறை பற்றி ... அப்படியே தொடர்ந்து , தமிழகத்தில் இருந்த வெள்ளைக்கார மாவட்ட ஆட்சியாளர்களில் ஆசு துரை தான் உள்ளதிலேயே மிகவும் நல்ல மனிதர் . செங்கோட்டை பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் பிரசவ வழியால் அவதியுறுவதை பார்த்த அவர், மருத்துவமனைக்கு அப்பெண்ணை பார்ப்பன அக்கிரகாரம் வழியாக அழைத்து செல்ல முற்பட, அதை தடுக்க முற்பட்ட பார்ப்பன கும்பலை தனது கையில் உள்ள சாட்டையால் விளாசி தள்ளினார் . அப்படி சாட்டையால் விளாசி தள்ளப்பட்ட ஆட்களில் ஒருத்தன் தான் நம்ம வாஞ்சிநாதன் .


தன்னை சாட்டையால் அடித்ததோடு மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருத்தரை தாங்கள் வசிக்கும் பகுதியின் வழியாக பசுமாமிசம் சாப்பிடும் மிலேச்சன் அழைத்து சென்று தீட்டு படுத்தி விட்டானே என்ற வெறியில் பழிக்கு பழி வாங்க ஆசு துரையை கொடூரமாக சுட்டு கொன்றான். தன்னுடைய சட்டை பையில் " பாரத மாதவையும் இந்து தர்மத்தையும் அழிக்க வந்த கோ மாமிசம் சாப்பிடும் ஒரு மிலேச்சனை கொள்வது நம்முடைய தர்மம்" என்று தனது கைப்பட எழுதிய கடிதத்தை சட்டை பையில் வைத்து விட்டு கழிவறையில் போய் தற்கொலை செய்து கொண்டார், இது தான் மண் சொல்லும் வரலாறு . உடனே அவர் ஆங்கிலேயர்கள் நம்மை மிகவும் கொடுமைப்படுத்தினர். கமலகாசன் நடித்த ஒரு படத்தில் கூட ஆங்கிலேயர்கள் நமது பெண்களை நிர்வாணமாக்கினர் என்று வரலாறு இருக்கிறதே என்று ஒரே போடாக போட்டார் . அதற்கு நான் முத்தம் கொடுப்பதற்காக படம் எடுப்பவர் கமலகாசன் , அங்கெல்லாம் பொய் வரலாற்றை தேடுவது ஒரு மாதிரி இல்லையா ? என்று கேட்டவாறே ... குமரி மாவட்டத்தில் சக இந்திய பெண்களை மார்பு சட்டை அணிய விடாமல் தடுத்தும், மார்பு சட்டை அணிந்த ஒரு பெண்ணின் மார்பகத்தை அறுத்து எறிந்தும் அட்டகாசம் பண்ணப்பட்ட வரலாறு தெரியுமா ? என்று கேட்டேன் . பேந்த பேந்த விழித்தார் . இதற்கு மேல பேசினால் அந்த பெரியவர் அழுது விடுவார் என்று அத்தோடு விட்டு விட்டேன.


உண்மையான வரலாறு மண்ணில் புதைந்து கிடக்கிறது .... அதை அந்த மண்ணில் போய் தேடினால் கிடைக்கும் .... கோவண கயிரில் (பூணூலில்) தொங்குவதை எல்லாம் வரலாறு என்று சொல்லிக் கொண்டு அலையக் கூடாது . அதன் பெயர் கோவணம் .

https://www.facebook.com/anthony.fernando.796/posts/719922414758723


சபரி சாமியும் ஓட்டை வடையும்



நேற்றிரவு தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்கியது தான் தாமதம் , பசியும் சேர்ந்து நம்மோடு கூட வந்து விட்டது . பசியை விரட்டி விடுவதற்காக தொடர்வண்டி நிலையத்திற்கு எதிர்த்தார் போன்ற ஒரு தள்ளுவண்டி கடைக்கு சென்று நாலு இட்டிலிக்கு சொல்லி விட்டு அப்படியே அந்த பக்கம் சுற்றி கொண்டிருந்த சபரி மலை பக்தர்களை நோட்டம் விட்டு கொண்டிருந்தேன். எல்லாரும் சுத்த பத்தமாக பட்டையும் பொட்டுமாக திரிந்து கொண்டிருந்தனர் அவர்களது தலை என்னமோ எண்ணெய்யை பல வருடங்களாக காணாத தலையாக தான் இருந்தது .

இப்படி நான் பராக்கு பார்த்து கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு கை என் காலை தடவி சென்றது . அது என்னது என்று குனிந்து பார்க்கையில் அப்போது ஒரு பக்தர் என் காலில் இருந்து கையை எடுத்தது தெரிந்தது ... என்னடா இது புது கோலமாக இருக்கிறது. சுத்த பத்தமாக இருக்கிற சபரி சாமி இந்த ஆசாமியின் காலை தொட்டு கும்பிடுகிறதே என்று அவரை உற்று கவனிக்கையில் அவரது கையில் ஒரு ஓட்டை வடை இருந்தது. இப்போது தான் எனக்கு புரிந்தது சாமி என்னோட காலை தொட்டுக் கும்பிடவில்லை. என் கால் மீது விழுந்த ஓட்டை வடையை லபக்கென்று தூக்கி அவரது தட்டில் வைக்க தான் கையை நீட்டி இருக்கிறார் என்று ... இப்போது பக்கத்தில் இருக்கிற இன்னொரு சாமி ஒருவிதமான முனகலான அதட்டலில் வடையை கீழே போடுமாறு உசு உசு என்று இந்த சாமியிடம் குறிப்பால் உணர்த்த முனைகிறார். இந்த சாமியோ அதை காதில் வாங்காமல் ஓட்டை வடையை தனது பல்லால் பதம் பார்க்க தொடங்குகிறார் ... ம்ம்ம் என்னதான் சாமியாக இருந்தாலும் ஓட்டையில் விழாதோர் இவ்வுலகில் ஏது?... இதற்கு இடையில் நான் அவங்க ரெண்டு பேரையும் உற்று பார்ப்பதை கவனித்தாரோ என்னவோ அவரும் பேசாமால் அமர்ந்து விட்டார் ... இதற்கிடையில் நமக்கு கிடைத்த இட்டிலியை லபக்கி கொண்டு நடையை கட்டினேன் ..

ஆனால் இப்போது பசி போய் ஓட்டை வடைக்காக காலில் விழுந்த அந்த சபரி சாமி என் மனது முழுவதும் ஆக்கிரமித்து இருந்தார் ...

பல நூற்றாண்டுகளாக எண்ணெய் பயன்படுத்தாத தலை , மண்ணில் விழுந்த ஓட்டை வடைக்காக பரிதபிக்கும் மனம் என இருக்கும் ஒரு மனிதர் எதற்கு வெட்டியாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து கொண்டு மலை ஏறணும்.... அந்த காசை கொண்டு தலையை எண்ணெயால் குளிப்பாட்டி வருடம் முழுக்க சுத்த பத்தமாகவும் , ஆசை தீர ஓட்டை வாடை வாங்கி தின்று மகிழ்ச்சியாகவும் இருக்கலாமே அந்த ஒரு மாத சாமியான ஆசாமி


https://www.facebook.com/anthony.fernando.796/posts/720115378072760

விடியலை தேடி ஓடும் பறவைகள்




சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள என்னுடைய இணையரின் பெற்றோருடைய வீட்டு மேல்மாடியில் ஒரு இசுலாமிய தம்பதியினர் வாடகைக்கு குடியிருக்கிறார்கள். ஐந்துவயதில் ஒரு குழந்தை அவர்களுக்கு இருக்கிறது. தற்போது அந்த இசுலாமியருடைய மனைவி ஐந்து மாதம் கர்ப்பிணி பெண் . அவர்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு உறவினர்கள் பலர் அடிக்கடி வந்து செல்வது உண்டு. அப்படி வந்து செல்லும் உறவினர்களை பார்க்கும்போது நான் அடிக்கடி குழம்பி போய் விடுவேன்.
அது வேற ஒன்றுமில்லை நல்லா பெரிய குங்கும பொட்டு வைத்து கொண்டு ஒரு வயதான பெண்ணும் , வேறு சில சமயங்களில் பர்தா போட்ட வயதான பெண்ணும் வருவார்கள். ரெண்டு பேர் வந்தாலும் அந்த இசுலாமிய பெண் மிகுந்த மகிழ்ச்சியோடு வாங்க அம்மா என்று அழைத்து செல்வதுண்டு. குங்கும பொட்டு வைத்த ஒரு பெண்மணி கர்ப்பிணியாக இருக்கும் ஒரு இசுலாமிய பெண்ணை இவ்வளவு அக்கறையோடு வந்து கவனித்து செல்கிறாரே என்று ஆச்சரியமாக பார்ப்பது உண்டு. ரெண்டு நாளைக்கு அங்கே சென்று இருந்தபோது அந்த இசுலாமிய சகோதரரை பார்க்க நேரிட்டது. “அண்ணே, ஒரு குங்கும பொட்டு வைத்த ஒரு பெண்மணி அடிக்கடி உங்க வீட்டிற்கு வந்து உங்க மனைவியை ரொம்ப அக்கறையோடு கவனித்து செல்வதை பார்க்கிற போது தமிழர்களிடையே காணப்படும் சகோதர மனப்பான்மையை பார்க்க பெருமையாக இருக்கிறது” என்று பேச்சை ஆரம்பித்தேன். அது எங்க அம்மா தான் என்று சொல்லி என்னை நோக்கி ஒரு புன்னகையை கசிய விட்டார். நீங்க இசுலாமியர் உங்க அம்மா இந்து ரொம்ப குழப்பமாக இருக்கிறதே என்றேன். அவர் அதற்கு “நான் இசுலாம் மார்க்கத்தை விரும்பி ஏற்றுக் கொண்டேன் , எனது வீட்டில் எல்லாரும் இப்போதும் இந்து மார்க்கத்தை தான் பின்பற்றுகிறார்கள்” என்றார். நான் பதிலுக்கு உங்க வீட்டில் எதிர்ப்பு ஏதும் இல்லையா என்றேன். அவர்களுக்கு அதில் மிகுந்த மகிழ்ச்சி என்று அடுத்த வெடி குண்டை தூக்கி போட்டார்.


என்னடா இது இசுலாமியர் கடையில் பொருள் வாங்காதே என்று தீவிரமாக காவி வெறியர்கள் தீவிரமாக பரப்புரை செய்து கொண்டு இருக்கிற சூழலில் இங்க ஒரு இந்து குடும்பம் தனது ஆண் மகன் இசுலாமிய மார்க்கத்திற்கு மாறியதையும் அங்கே ஒரு பெண்ணை மணந்து கொண்டதையும் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறதே என்ற ஒரு வித முழிப்போடு அவரை பார்க்க அவர் அதை புரிந்து கொண்டவராய், சகோதரரே நான் சக இந்துக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்படும் அருந்ததியர்கள் சமூகத்தை சேர்ந்தவர்கள். அந்த சமூகத்தில் பிறந்ததாலேயே நான் பள்ளியில் படிக்கும்போது பல விதமான உடல் மற்றும் மனரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடன் படித்த இசுலாமிய சகோதரன் என்ன அவர் வீட்டிற்கு பக்ரீத் அன்று உணவு உன்ன அழைத்தான். நான் முகுந்த தயக்கத்துடனே அவனுடைய வீட்டிற்கு சென்றேன். ஆனால் அவனது பெற்றோர்களும் சகோதரர்களும் என்னை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரேவேற்றது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது . முதன் முதலாக ஒரு அந்நிய இடத்தில் மிகுந்த மரியாதையோடு நடத்தப்பட்டது எனக்கு மிகுந்த ஆச்சரியமாகபட்டது. அதன் பிறகு அந்த இசுலாமிய நண்பனுடனான எனது நட்பு தனித்துவமான ஒன்றாக மாறியது. அவன் தொழுகைக்கு போகிற நேரம் என்னையும் கூட்டி செல்ல அவனை நான் பணிப்பேன். தொழுகை செய்யும் நேரத்தில் வரிசையாக எல்லாரும் முகங்குப்புற விழும் நேரத்தில் ஒருவர் பின்புறம் பின்னால் இருப்பவரின் முகத்திற்கு நேராக இருப்பதும் அதை அங்கே ஒருவரும் பெரிது படுத்தாமல் தொழுகையில் மிகுந்த அக்கறையோடு இருப்பதும் என்னுடைய ஆச்சரியங்களை அதிகரித்தது.


கோவிலுக்குள்ளே அனுமதிக்கப்படாத சமூகத்தை சேர்ந்த எனக்கு இங்கே வழிபாட்டு தலத்தில் மனிதர்கள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் பழகுவதை பார்த்த போது எனக்குள் நான் இந்த மார்க்கத்தை தான் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்தது. அதற்கு பின்பு நான் இசுலாம் மார்க்கத்தை பற்றிய புத்தகங்ள் நிறைய படிப்பேன். சான்றிதழில் இந்துவாக இருந்தாலும் நான் வாழ்வியல் அடிப்படையில் ஒரு இசுலாமியனாகவே மாறி விட்டு இருந்தேன். ஆரம்பத்தில் எனது வீட்டில் உள்ளவர்கள் என்னை கேள்விகுறியோடு பார்த்தாலும் ஒரு முறை எனது பெற்றோர்களை நான் ஒருமுறை நோன்பு திறக்கும் விழாவிற்கு அழைத்து சென்றபோது போது அங்குள்ளவர்கள் எனது பபெற்றோர்களுக்கு அளித்த மரியாதையை பார்த்து அவர்களும் என்னுடைய இசுலாமிய மார்க்கத்தின் மீதான நாட்டத்தை பற்றி எதுவும் பேசுவதில்லை கல்லூரி படிப்பை முடித்து சென்னையில் வேலைக்காக வந்த போது ஒரு இசுலாமியர் நடத்தும் கடையில் எனக்கு வேலை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அது தான் தான் இசுலாம் மார்க்கத்தை தழுவுவதற்கான வாய்ப்பை உருவாக்கியது. முதல்முறையாக இசுலாம் மார்க்கத்திற்குரிய சடங்குகளின் மூலம் என்னை முற்றிலுமாக இசுலாமியனாக மாற்றிக் கொண்டேன். என்னுடைய சான்றிதழிலும் இந்து என்ற இடத்தில் இசுலாமியர் என்று சட்டப்படி மாற்றிக் கொண்டேன். எனது நிறுவனத்தில் என்னுடன் வேலை பார்த்த ஒரு தோழர் ஒருவர் எனக்கு வேலூரை சேர்ந்த இசுலாமியர் ஒருவரின் மகளை பார்த்து எனக்கு திருமணம் செய்வித்தார். நான் இந்துவாக இருந்து இசுலாம் மார்க்கத்தை தழுவி கொண்டவன் என்பதும் எனது குடும்பத்தினர் இந்துவாக இருப்பதும் அவர்களுக்கு தெரிந்தும் அதை அவர்கள் ஒரு தடையாக கருதவில்லை. எனது பெற்றோர்களை அவர்கள் மிகுந்த கண்ணியத்துடன் தான் இன்றளவிலும் நடத்தி வருகிறார்கள். என்னுடைய மனைவியும் என்னுடைய தாய் தந்தையை தன்னுடைய தாய் தந்தையராக தான் பாவித்து வருகிறார். எனது பெற்றோர்களுக்கும் இசுலாம் மார்க்கத்தின் மீது ஈடுபாடு உண்டு என்றாலும் உறவினர்களின் அழுத்தத்தினால் இப்போதும் இந்துவாகவே இருக்கிறார்கள். அல்லா கூடிய விரைவில் அவர்களையும் விரைவில் என்னோடு வந்து சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது சகோதரரே என்று அவர் சொல்லி முடித்தபோது இந்த மனிதருக்குள் இவ்வளவு பெரிய கதை இருக்கிறதா என்ற பிரம்மிப்பு எனக்குள் ஏற்பட்டது.


முந்தையை தலைமுறைகளை போல் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த இன்றைய தலைமுறையினர் பிறப்பு என்பது முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவு என்ற கட்டுக்கதைகளுக்கு பயந்து அடிமையாக இருக்க விரும்பவில்லை என்பது அம்மனிதரின் பேச்சில் தெரிந்தது